திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கோரல், பிஜேபி அல்லாத கட்சிகள் எதிர்ப்பு – நிதர்சனமா, தேர்தல் யுக்தியா? (1)
04-12-2023 முதல் 22-12-2023 வரை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டம்: திமுக, திமுக ஆதரவு எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் ஏதாவது ஒரு விதத்தில் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்ள எதையாவது பேசுவது என்பதனை கொள்கையாகக் கொண்டுள்ளனர் என்பதை அறியலாம். இதற்கு, ஏ. ராஜா, திருமாவளவன், வெங்கடேசன் முதலியோரை உதாரணமாக சொல்லலாம். தமிழில் பேசுவது என்பது மட்டுமல்லாது, திராவிடம்-ஆரியம், வடக்கு-தெற்கு, இந்தி-தமிழ், பெரியாரிஸம்-நாத்திகம் என்று பேசி பிரிவினை நோக்கில் கருத்துத் தெரிவிப்பர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா பற்றிய விவாதத்தில் மறுபடியும் அத்தகையப் பிரச்சினை உண்டாகியது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது[1]. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது[2]. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
திமுக செந்தில்குமாரின் அநாகரிகமான இந்துவிரோத பேச்சு: இதனையடுத்து, நேற்று (05-12-23) இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா விவாதத்தில், மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. செந்தில் குமார், “இந்தி பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் தான் பா.ஜ.க பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவான கெளமூத்ரா என்று தான் சொல்வோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வால் ஆட்சியை கைப்பற்ற முடியாது,” என்று பேசினார். திமுக எம்.பி. செந்தில் குமார், பா.ஜ.க வென்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசிய போது பயன்படுத்திய வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பியது. தேசிய ஒற்றுமை, இந்திய மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மூலம் அமைதி மேலோங்க வேண்டும் என்றெல்லாம் நல்லமுறையில் விவாதிப்பதை விடுத்து, இத்தகைய கேவலமான சொல்லாடலை உபயோகித்ததை, பெரும்பாலான எம்.பிக்களை கோபமூட்டுவதாக இருந்தது.
காங்கிரஸ், சமஜ்வாதி கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தது: செந்தில் குமார் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே போல், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் செந்தில் குமார் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், செந்தில் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.கவினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், செந்தில் குமார் அவர் பயன்படுத்திய வார்த்தைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருகிறது என்பதால் நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார். வழக்கம் போல மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், அவரின் நிலை, சித்தாந்தம், இந்துவிரோத சிந்தனை எல்லாம் மாறிவிட்டதா என்று கவனிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எல்லோரும் கேட்டு விட்டார்கள், அவரது விரோத-சிந்தனை கோடிக் கணக்கான இந்தியர்களுக்குத் தெரிந்து விட்டது, இதனால், அரசியல் நஷ்டம் உண்டாகும் என்ற பயத்தில், மன்னிப்புக் கேட்டுள்ளது தெரிகிறது. ஏனெனில், விகடன், அந்த ஆள் அப்படியில்லையே என்ற தொணியில் செய்தி வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம்.
கோமூத்திரம் / பசுவின் சிறுநீர் பேச்சு: ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா விவாதத்தில் டிசம்பர் 5ம் தேதி பங்கேற்று பேசிய தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் செந்தில்குமார், ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவது குறித்து குறிப்பிட்டபோது[3], “வடக்கே இந்துத்துவாவை ஆதரிக்கும் மாநிலங்கள் அல்லது நாங்கள் ‘மாட்டு மூத்திர மாநிலங்கள்’ என்று அழைக்கும் மாநிலங்களில்தான் பா.ஜ.க வெற்றிபெற முடியும். தென்னிந்தியாவுக்குள் பா.ஜ.க–வால் வரவே முடியாது,” கௌ மூத்ரா (கோ மூத்ரா) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்[4]. அந்த வார்த்தை பின்னர் அவைக் குறிப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு நீக்கப்பட்டது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார் கூறிய கருத்துக்கு மக்களவையில் பாஜக உறுப்பினர்களும் அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.பி. செந்தில்குமார் பேசியது தொடர்பாகப் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘கோ மூத்திர மாநிலங்கள்‘ தொடர்பாக, மக்களவையில் அவர் பேசியதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது சொந்த கருத்து. ஆனால், கௌமுத்ராவை நாங்கள் மதிக்கிறோம்,” எனப் பதில் தந்துள்ளார்[5].
காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கௌமதாவையும் நம்புகிறது: மற்றொரு காங்கிரஸ் எம்.பியான ராஜீவ் சுக்லா[6], “திமுகவின் அரசியல் வேறு. காங்கிரஸின் அரசியல் வேறு. இந்த விஷயத்தில் காங்கிரஸ் உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கௌமதாவையும் நம்புகிறது. நாங்களும் நம்புகிறோம். அனைத்து மதத்தினரையும் இணைத்து முன்னேறுவோம்,” எனத் தெரிவித்துள்ளார்[7]. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிரிஷ்ணம் கூறுகையில், “திமுக தலைவர்கள் தொடர்ந்து இதோபோன்று சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருந்தால், பாஜக “கோ மூத்திர மாநிலங்கள்” மட்டுமல்ல அனைத்து மாநிலங்களில் ஆட்சி அமைக்கும்,” என்று கூறினார்[8]. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை காங்கிரஸ் எம்.பி, கார்தி சிதம்பரம்[9], “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் தாம் பேசிய கருத்துகளை திரும்ப பெற வேண்டும்” என கூறி இருந்தார்[10]. இவர் சனாதன தர்மம் விவகாரத்திலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது[11]. இதனால் ஏற்பட்ட அமளியால் கேள்வி நேரம் 06-12-2023 புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது[12].
மன்னிப்புப் போர்வையில் அமுக்கி வசிக்கும் திமுக: ஆக காங்கிரஸ், சமஜ்வடி கட்சிகளுக்கு தங்களுக்கு இருக்கும் இந்து ஓட்டுகளும் போய் விடுமோ என்ற பயம் வந்து விட்டது. இனியும் இந்த இந்துவிரோத திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்தால், நிச்சயமாக, வடமாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்பது அக்கட்சிகளுக்குத் தெரிந்து விட்டது. முஸ்லிம் ஓட்டு இருக்கிறது, அதனால், இந்து ஓட்டும் கிடைக்கும் என்று மம்தா உறுதியுடன் இருப்பதால், திமுக-கூட்டுப் பற்றி கவலைப் படுவது இல்லை. ஆம்-ஆத்மி மட்டும் சீக்கியர் ஆதரவு முதலியன இருப்பதால், இதைப் பற்றி கண்டுகொள்வதில்லை. எனவே, கடைசியில் பாதிப்பு திமுகவிற்குத் தான். ஆகவே தான், “மன்னிப்பு” போர்வையில், அமுக்கி வாசிக்க தீர்மானித்துள்ளது. போதா குறைக்கு வெள்ளம்-நிவாரணம் போன்ற பிரச்சினைகள் இருப்பதால், மத்திய அரசைப் பகைத்துக் கொண்டால் பணமும் கிடைக்காது என்பதும் தெரியும்.
© வேதபிரகாஷ்
08-12-2023
[1] நக்கீரன், நாடாளுமன்றத்தில் சர்ச்சை பேச்சு; “மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – செந்தில் குமார் எம்.பி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 06/12/2023 | Edited on 06/12/2023
[2] https://www.nakkheeran.in/24-by-7-news/india/controversial-speech-parliament-and-senthil-kumar-mp-says-i-beg-your-pardon
[3] தினமணி, திமுக எம்.பி. செந்தில்குமார் கருத்தால் மக்களவையில் அமளி, By நமது சிறப்பு நிருபர் | Published On : 07th December 2023 03:09 AM | Last Updated : 07th December 2023 03:09 AM.
[4] https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2023/dec/07/lok-sabha-by-dmk-mp-senthilkumar-4118398.html
[5] புதியதலைமுறை, PT National : “வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்“- திமுக எம்பி செந்தில்குமார்! பிரதமர் மோடி ட்வீட்!, PT Web, 06 December 2023, 10:44 pm.
[6] https://www.puthiyathalaimurai.com/india/today-pt-national-news
[7] புதியதலைமுறை, “வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்“- திமுக எம்பி செந்தில்குமார்!, PT Web, 06 December 2023, 10:44 pm.
[8] https://www.puthiyathalaimurai.com/india/dmk-mp-senthilkumar-stokes-controvers-on-bjp-won?utm_source=website&utm_medium=related-stories
[9] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Gomutra: திமுக எம்.பியின் சர்ச்சை பேச்சு! வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டார், Kathiravan V HT Tamil, Dec 06, 2023 11:44 AM IST
[10] https://tamil.hindustantimes.com/tamilnadu/dmk-mp-senthil-kumars-gomutra-states-controversy-zoho-ceo-sridhar-vembu-apologizes-to-north-indians-131701842415756.html
[11] மாலைமலர், “கோமூத்ரா மாநிலங்கள்” என்று சர்ச்சை பேச்சு– செந்தில்குமார் மன்னிப்பு கேட்டார், By Maalaimalar .6 டிசம்பர் 2023 12:36 PM (Updated: 6 டிசம்பர் 2023 1:22 PM).
[12] https://www.maalaimalar.com/news/national/tamil-news-dmks-controversial-talk-of-gaumutra-states-691922