Archive for the ‘இலை’ Category

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (1)

மே 8, 2015

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை –  “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (1)

நெரூர் - 2015 - சாப்படு தயார் 28-04-2015

நெரூர் – 2015 – சாப்படு தயார் 28-04-2015

கரூர் அருகே நெரூர் கிராமத்தில் நடந்த பிரம்மேந்திராள் கோவில் ஆராதனை விழாவில் பக்தர்கள், எச்சில் இலைகள் மீது படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்த நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பக்தர்களுடன், கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா முதலிய மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் வில்வமரத்தின் கீழே அமைந்துள்ளது ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரமேந்திராள் ஜீவசமாதி[1]. சதாசிவ பிரம்மேந்திராள் சபா சார்பில் ஆண்டுதோறும் சதாசிவரின் ஆராதனை விழா நடத்தப்படுகிறது, என்று செய்திகளை வழக்கம் போல தமிழ் நாளிதழ்கள் வெளியிட்டன.

நெரூர் - 2015 - சதுர் வேத சம்ஹிதா ஹோமம்

நெரூர் – 2015 – சதுர் வேத சம்ஹிதா ஹோமம்

ஆராதனைக்கு முன்பாக நான்கு வேத சம்ஹிதா ஹோமங்கள் நடந்து முடிந்தது: நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், ஆராதனைக்கு முன்பாக உலக நன்மைக்காக, சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது[2]. கரூர் மாவட்டம், நெரூரில் புகழ்பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. இங்கு, உலக நன்மைக்காக, மார்ச், 25ம் தேதி முதல் சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.

  • மார்ச், 25ம் தேதி முதல், 31ம் தேதி வரை ரிக் வேத ஸம்ஹிதா ஹோமம்,
  • ஏப்ரல், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை யஜுர் வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.
  • ஏப்ரல், 20ம் தேதி வரை ஸாம வேத ஸம்ஹிதா ஹோமம்,
  • ஏப்ரல், 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை அதர்வ வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.

ஹோமம் குறித்து வெங்கடேஸ்வரன், கூறியதாவது: “ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் அறியப்படுகின்றன. நான்கு வேதங்களும் வைத்து ஒரு இடத்தில் ஹோமம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வேதத்திலும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் தலைமையில் ஹோமம் நடத்தப்படுகிறது. சைதன்யாகாலே தலைமையில், ரிக் வேத ஸம்மிதா ஹோமம், சுனில் லிம்யா, தலைமையில், யஜுர் வேதம் ஸம்ஹிதா ஹோமம், ராமகிருஷ்ணா பட், தலைமையில் ஸாம வேத ஸம்ஹிதா ஹோமம், ரெகுநாத காலே, தலைமையில், அதர்வ வேத ஸம்ஹிதா ஹோமம் நடத்தப்படுகிறது. 28ம் தேதி நடைபெறும் ஆராதனை விழாவில், கலசத்தில் உள்ள புனித நீரால், ஸ்வாமிக்கு பூஜை செய்யப்படும்”, என்று கூறினார்[3].

நெரூர் - 2015 - சதுர் வேத சம்ஹிதா ஹோமம். விளக்கம்

நெரூர் – 2015 – சதுர் வேத சம்ஹிதா ஹோமம். விளக்கம்

நடிகர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் வந்து வணங்கிய அதிஸ்டானம்: “கன்னட இசை சித்தர்களில் புகழ்பெற்றவரான இவர் சித்தர் ஆவார்” என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், “இவர் ஜீவசமாதி அடைந்த இடம்தான் இந்த ஆலயமாகும். இங்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தியானம் செய்து அவரின் அருள் பெற்று சென்றுள்ளனர்”, என்று கூறியிருப்பது, அதைவிட விசித்திரமானது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வந்துபோனதை அவை ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. இக்கோயிலின் ஆராதனை விழா வருடா, வருடம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆராதனையின்போது பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து சதாசிவ பிரமேந்திராள் அருள் பெறுவது வழக்கம். கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்ற இலையில் ஏதாவது ஒன்றில், சதாசிவ பிரம்மேந்திரரே வந்து சாப்பிட்டு சென்றுள்ளார் எனவும், அனைத்து இலைகளில் மீதும் உருளும் போது, நினைத்த காரியங்கள் அனைத்தும் சித்தியாகும் என்ற நம்பிக்கை கடந்த பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.

நெரூர் - 2015 - சாப்படு தயார், இலைகள் பாடப்பட்டு விட்டன - 28-04-2015.

நெரூர் – 2015 – சாப்படு தயார், இலைகள் பாடப்பட்டு விட்டன – 28-04-2015.

28-04-2015 அன்று 101 வது நடைபெற்ற ஆராதனை விழா: இந்த நிலையில், 28-04-2015 அன்று 101 வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டிக் கொண்டு சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு விழா கடந்த 23ம்தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி மதியம் 1.30 மணியளவில் நடைபெற்றது. இதற்காக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கொண்டு விரதம் இருந்து கோயிலுக்கு வந்திருந்தனர். இம்முறை வழக்கத்திற்கு மாறாக, அங்கப்பிரதட்சணம் செய்பவர்கள் ஒரு விருப்ப-விண்னப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ரூ.20/- செல்லுத்தி, கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டனர். அந்த படிவத்தில் கீழுள்ளவை இருந்தன:

நெரூர் - 2015 - சாப்படு தயார், மூன்று வரிசை பந்தி - கூட்டம் அதிகம் - 28-04-2015.

நெரூர் – 2015 – சாப்படு தயார், மூன்று வரிசை பந்தி – கூட்டம் அதிகம் – 28-04-2015.

நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திர சபா

19, அக்ரஹாரம், நெரூர் – 639 004.

ஆராதனை அங்கபிரதட்சிணம் செய்வதற்கான ஒப்புதல்

இன்று 28-04-2015 நடை பெறும் நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திராள் 101வது ஆராதனை விழாவில் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டும், கட்டுப்பட்டும் நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்:

1.       நான் எனது சுய விருப்பத்தின் பேரில் எந்தவிதமானதும், எவருடைய கட்டாயமும், யாருடைய வற்புறுத்துதலும் இன்றி எனது சொந்த நம்பிக்கையின் பேரிலேயே இந்த பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்கிறேன்.

2.       நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் மீது நான் கொண்டுள்ள பக்தியினால், நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே வேண்டுதல் செய்து கொண்டு, பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்ய சம்மதிக்கிறேன்.

3.       எனது இந்த வேண்டுகோள் நிறைவேற்றிக் கொள்வதற்காக நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திர சபா அவர்கள் நல்லமுறையில் சிறப்பான வசதிகளையும், பாதுகாப்பும் அளித்திருக்கிறார்கள்.

4.       மேற்படி அங்கபிரதட்சிணம் செய்து முடிந்தவுடன் எனக்கு குளிக்கவும், உடை மாற்றிக் கொள்ள செய்யப்பட்டுள்ள வசதிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

5.       ஜாதி, சமயம், இனம், மொழி, இவைகளைக் கடந்து, எனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவே, நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே, எனது சொந்த நம்பிக்கை பேரிலேயே மேற்படி கட்டணம் செலுத்தி இந்த பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்கிறேன்.

இப்படிக்கு,

நெரூர் - 2015 - அங்கப்பிரதட்சிணம்- விண்ணப்பம்

நெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- விண்ணப்பம்

சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம்: அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சதாசிவ பிரமேந்திராள் அருள் பெற்றனர். பின்னர், மதியம் 1.30 மணியளவில் நெரூர் அக்ரஹாரம் தெருவில் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தில் பங்கு கொண்ட அனைவரும் சாப்பிட்ட இலையை எடுக்காமல் சென்று விட்டார்கள். பின்னர், நேர்த்திக் கடனுக்காக வேண்டிக் கொண்ட பக்தர்கள் அனைவரும்[4], அருகில் உள்ள காவிரி ஆற்று வாய்க்காலில் குளித்து விட்டு, அன்னதானம் துவங்கிய பகுதியில் இருந்து முடிவடையும் பகுதி வரை அங்கபிரதட்சணம் செய்து பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்[5]. இந்த வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற்றதையடுத்து நெரூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை காண நெரூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்[6].

நெரூர் - 2015 - அங்கப்பிரதட்சிணம்- ரசீது ரூ.20

நெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- ரசீது ரூ.20

© வேதபிரகாஷ்

08-05-2015

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=91227

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1233348

[3] தினமலர், நெரூர் சதாசிவ பிரமேந்திரர்சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம், ஏப்ரல்.9, 2015:01:30.

[4] எல்லோரும் கலந்து கொள்ளவில்லை, விருப்பத்துடன் விண்ணப்பம் கொடுத்தவர்கள் தாம், கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பொலீசார் இருந்தது பற்றி ஊடகங்கள் குறிப்பிடவில்லை.

[5] http://inneram.com/news/tamilnadu/2170-devotees.html

[6] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/thousands-devotees-throng-nerur-temple-225667.html#slide154671