மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? மத்திய அரசு எதிர்ப்பு இதில் சேர்க்கப் பட்டு தீவிரப் படுத்தப் படுகிறதா? (3)
‘வாரியாருக்கு ஏற்பட்ட நிகழ்வு தான் உமக்கும் ஏற்படும்‘ என்று சொல்வது, வேதனையின் உச்சம்: நேரிடையாக இல்லாமலிருந்தாலும் மறைமுகமாக (apologetic) திமுகவை கண்டித்துள்ளார் வாரியாரின் மருமகனும், இறைபணியில் இருப்பவருமான சக்திவேல் முருகனார்[1]. அவர் அவ்வாறு கூறியதாவது: “கிருபானந்த வாரியார் இறையருள் பெற்றவர்; மகானாக வாழ்ந்தவர். அவரது இறை சொற்பொழிவு சாகா வரம் பெற்றவை. அப்படிப்பட்ட மகானை, அன்றைக்கு தி.மு.க.,வினர், நெய்வேலியில் வைத்து தாக்கியது நடக்கக் கூடாதது. அவர் வழி வாழும் ஒவ்வொருவரும், அந்நிகழ்வை மறக்க முயன்று கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட மகானை போற்றாவிட்டாலும் பரவாயில்லை; யாரும் சிறுமைப்படுத்த கூடாது. ஒரு கட்சி தலைவரை மிரட்ட வேண்டும் என்பதற்காக, ‘வாரியாருக்கு ஏற்பட்ட நிகழ்வு தான் உமக்கும் ஏற்படும்‘ என்று சொல்வது, வேதனையின் உச்சம். ஆர்.எஸ்.பாரதி இப்படி பேசினார் என்பதை கேட்டதும், வாரியார் வழி வாழும் லட்சோபலட்சம் பற்றாளர்களும் கொதித்து போயினர். உறவுக்காரர்கள் சொல்ல முடியாத வேதனையில் ஆழ்ந்தனர். இப்படியொரு சர்ச்சை உருவானதும், உணர்வுள்ள பற்றாளர்கள் ஒன்று கூடி, ‘இனி இது தொடரக் கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும்‘ என்று முடிவெடுத்தோம்,’” என்றார்[2].
இனிமேலாவது வாரியாரை இழுத்து, தேவையில்லாத அரசியல் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்: சக்திவேல் முருகனார் கூறியது, ‘‘அதற்காக, என்னை போன்றவர்கள், தங்களின் மன வேதனையை இறைவன் முன் வைத்தோம். அரசில் இருப்போருக்கும் எடுத்து சென்றோம். இறைவன் உருவில் வாழும் வாரியாருக்கும், எங்கள் வேதனையும், வேண்டுதலும் சென்றிருக்க வேண்டும். என்ன நடந்தது என தெரியாது. யாரை சிறுமைப்படுத்துவது போல பாரதி பேசினாரோ, அவரே இன்றைக்கு, அதே வாரியாரை தன் துாரத்து உறவினர் என கூறியுள்ளார். இப்படியொரு நெருக்கடி அவருக்கு ஏற்பட காரணம் இறைவனும், இறைவனாக வாழும் கிருபானந்த வாரியாரும் தான் என்பதில், எள்ளளவும் மாற்று கருத்தில்லை. பிரச்னையில் இருந்து விடுபட, அவர் அப்படி சொல்லி இருப்பதாகவே தெரிகிறது. வாரியார் குடும்ப நிகழ்ச்சியில், அவரை யாரும் பார்த்ததில்லை. ஜாதிக்காரராக இருந்தால், எப்படியோ ஒரு வழியில் உறவு வந்து விடும் என்ற எண்ணத்தில் சொல்லியிருக்கலாம். இனிமேலாவது வாரியாரை இழுத்து, தேவையில்லாத அரசியல் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்,” இவ்வாறு சக்திவேல் முருகனார் கூறினார்.
முதலியாருக்கு கோபம் வந்துள்ளது, அமையாக எச்சரிக்கையும் சேர்ந்துள்ளது: சக்திவேல் முருகனார் இங்கு முதலியார் என்ற ரீதியில் கொதித்துப் போனதை ஒப்புக் கொண்டுள்ளதை கவனிக்கலாம். ஆனால், அது ஏனோதானோ என்றுதான் உள்ளது. “‘இனிமேலாவது வாரியாரை இழுத்து, தேவையில்லாத அரசியல் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்,” என்று பணிவோடு வேண்டிக் கொண்டது தெரிகிறது. வடுகர் என்று மற்றவர்களை தூஷிக்கும் போக்கு இல்லை, தெலுங்கன் என்ற சொற்பிரயோகம் இல்லை வந்தேறி என்ற வசைபாடலும் இல்லை. இப்பொழுது தான் நாயுடு கருணாநிதி சிலையைத் திறந்து வைத்துச் சென்றுள்ளார். ஜனாதிபதிக்கு நின்றால் திமுக ஆதரவு என்ற நிலையும் வெளிப்பட்டுள்ளது. ஆக சக்திவேல் முருகனார் சமஸ்கிருதத்தைப் பழிப்பார், பிராமணர்களை தூஷிப்பார். ஆனால், வடுகர்களை சீண்ட மாட்டார். அது இவாளுக்கு உள்ள அன்டெர்ஸ்டேன்டிங் எனலாம். இந்துத்துவவாதிகள் இந்துக்களைப் பிரிக்கும் திட்டங்களுக்கு ஒத்துப் போகும் போக்கைக் காணலாம். முக்கியமான பிரச்சினை / பிரச்சினைகளை இவ்வாறு, எதையாவது வைத்துக் கொண்டு திசைத் திருப்புவர். மறக்க வைப்பர். தொடரும் பிரச்சினை / பிரச்சினைகளை கையாள வேண்டும் என்ற எண்ணம், செயல்முறை, முற்போக்கு திட்டம் இல்லை.
மயிலாடுதுறை விவகாரங்கள்: தமிழகத்தின் தருமபுரம் மடத்தில் ‘பட்டின பிரவேசம்’ சடங்குக்கு 27-04-2022 அன்று தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் சில ஆதினங்களுடன் ‘தெய்வீகப் பேரவை’ ஆரபிக்க கூட்டம் நடத்தினார். ‘பட்டின பிரவேசம்’ தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், மதுரை ஆதீனம், தடை உத்தரவை எதிர்த்துப் பேசியதற்காக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது பற்றி பிரதமரைச் சந்தித்துச் பேசப் போவதாகவும் குற்றம் சாட்டினார். 19-04-2022 அன்று ஆளுனர் மயிலாடுதுரை வந்தது, திக வகையறாக்கள் தாக்க முயன்றது முதலியனவும் இதில் அடங்கும். இதே காலகட்டத்தில் இப்பகுதிகளில் என்.ஐ.ஏ.வும் சோதனை நடத்தி, சிலரை கைது செய்தது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை 08-06-2022 அன்று மேற்கொண்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், கிளியனூர், உத்திரங்குடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சென்னையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொண்ட குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் நேற்று காலை மயிலாடுதுறை சென்றனர். இவர்கள் 5 குழுக்களாக பிரிந்து நீடூர், எலந்தங்குடி, அரிவேளூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 11 மணி வரை தொடர்ச்சியாக 5 மணி நேரம் நடந்தது. பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது சோதனையை முடித்துவிட்டு மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்னை திரும்பினர். ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்தன.
மதுரை ஆதீனம் மிரட்டுகிறார்கள் என்று புகார்: 04-05-2022 புதன்கிழமை தஞ்சாவூர் அருகே களிமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் சொத்துக்களை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வருகின்றனர் என்று கூறினார். மேலும், “நான் அவர்களிடம் அதிக கேள்விகளை கேட்பதால், எனக்கு அச்சுறுத்தல் வருகிறது. கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் வீடுகள் கட்டியுள்ள அவர்கள், வாடகை கொடுக்க மறுக்கின்றனர். கோவில் நிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள், ஊருக்குள் நுழைந்து கடவுளுக்கு திருப்பணி செய்ய முடியாது என என்னை மிரட்டுகிறார்கள்,” என்றும் ஆதீனம் கூறினார். பின்னர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தெரிவிக்க உள்ளதாகவும் ஆதீனம் கூறினார். மதுரை ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் ஆதீனத்துக்கும், ஆதீன மடத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, மாநகரக் காவல் ஆணையரிடம் 05-05-2022 வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் தினம்–தினம் பிரச்சினைகளைக் கிளப்புவது: பட்டின பிரவேசம் தடை பற்றி பெருமளவில் எதிர்ப்பு கிளம்பியதால், அரசு ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. 22-05-2022 பட்டின பிரவேசம் நிகழ்ச்சி அமோகமாக நடந்தது. அப்பொழுது, மதுரை ஆதீனம், உலகம் முழுவதும், எல்லோருக்கும் அறியச் செய்ததால், திகவினருக்கு நன்றியும் தெரிவித்தார். 26-05-2022 மோடியை சந்தித்தார். இதனால், திமுகவினர் கலங்கித் தான் போயினர். மேலும் அன்று மோடிக்கு முன்பே திராவிடியன் மாடல் என்றெல்லாம் ஸ்டாலின் பேசியதும் கேள்விக்குறியானது. திமுகவினர் மெச்சிக் கொண்டாலும், அது எதிர்வினையாகுமா என்று யோசிக்க ஆரம்பித்தனர். மத விசயங்களில் தலையிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு, தினம்-தினம் கோவிலுக்குச் செல்வது, பிரச்சினையைக் கிளப்புவது, செய்தியாக்குவது, அறிக்கை விடுவது என்பது வழக்கமாகி விட்டது. ஆகையால், திராவிடத்துவ-பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத ஆட்சி இவ்வாறான பிரச்சினைகளை தினம்-தினம் எழுப்ப, திட்டமிட்டே செயல்படுவதாகத் தெரிகிறது.
ஜூன் 2022ல் வெளிப்படும் மோதல் போக்கு: ஜூன் 2022லும் ஆரம்பம் முதலே திமுகவினர் தீவிரமாகவே செயல்பட ஆரம்பித்தனர். கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் 03-06-2022 வைத்துக் கொண்டு, ஊடகங்களில், வெற்ப்புப் பேச்சை ஆரம்பித்தனர். ராஜிவ் காந்தி என்ற திமுக ஊடக தொடர்பாளர், பிராமணர்களைக் கொல்வதை, பெரியார் பேச்சு வைத்து நியாயப் படுத்தினார். இ.கே.எஸ். இளங்கோவன், இந்தி எதிர்ப்பு சாக்கில், சூத்திரர் என்றெல்லாம் பேசினார். ஸ்டாலின் காயதே மில்லத் சமாதிக்குச் சென்று மரியாதை செல்லுத்துகிறார். கவர்னர் எதிப்பு பிரச்சாரமும் தீவிரமாக தொடர்கிறது. ஆனால், ஆதினங்கள் பற்றி எதிர்மறை செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஆங்கில டிவிக்களில் இதைப் பற்றிய விவாதங்கள் நடந்தன. இதனால், திமுகவின் போக்கு நாடெங்கும் அறியப் படுகிறது. அந்நிலையில் தான், எல்லாவற்றையும் மறைக்க, திசைத் திருப்ப, ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்துள்ளனர் போலும்…..
© வேதபிரகாஷ்
13-06-2022
[1] தினமலர், சொந்தம் கொண்டாடுகிறார் ஆர்.எஸ்.பாரதி; இது தான் மகிமை என்கிறார் வாரியார் மருமகன், Added : ஜூன் 12, 2022 00:33.