கோவில்கள்–அவற்றின் நிலை, கொள்ளை–சிலைகடத்தல்: அந்நிலைகளில் அர்ச்சகர் வேலை–பெரியாருக்கு மாலை, வேலை கேட்கும் உரிமை–இந்துமதத்தின் நிலை!
2006-2015 – அரசியலாக்கப் பட்ட அர்ச்சகர் பயிற்சி, நியமனம் முதலியன: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது[1]. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன[2]. அதில் 206 பேர் பயிற்சி பெற்றார்கள். இதனிடையே அந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, படித்து முடித்த மாணவர்களை அர்ச்சகராகப் பணியமர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது[3]. 2015-ம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அந்த அரசு ஆணை செல்லும் என்று உத்தரவு வந்தாலும்கூட பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்குவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை[4]. திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத கட்சிகள், அமைப்புகள் முதலியவை, இப்பிரச்சினையில் நுழைந்து, அரசியலாக்கின. கம்யூனிஸ, முஸ்லிம், கிருத்துவ அமைப்புகளும் இதில் மூக்கை நுழைத்துக் குழப்பின. போதாகுறைக்கு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், பெரியார் சிலைக்கு மாலை போடுதல் போன்ற காரியங்களையும் செய்தனர்.
ஜூலை 2018ல் முதல் அர்ச்சகர் நியமனம்: 2018ல் இந்த உத்தரவு மெய்ப்பிக்கும் வகையில், மதுரையில் பிராமணர் அல்லாத ஒருவர் -மாரிச்சாமி என்பவர், அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்[5]. அழகர்கோவிலின் உப-கோவிலான தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில், அர்ச்சகராக அவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். நேர்முகத் தேர்வின் போது, மந்திரங்களை மிகச் சரியாக உச்சரித்ததால், அவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது[6]. அதாவது, எந்த மந்திரங்கள், மொழி எல்லாம் சொல்லப் படவில்லை. ஆனால் இத்தகைய நடைமுறை பிரச்சினைகள் எழும் என்று தெரிகிறது. பயிற்சி எனும் போது, படிப்பதால் மட்டும் எல்லா கிரியைகள், முறைகள் எல்லாம் அத்துப்படியாக வந்துவிடுமா என்று தெரியவில்லை. மேலும் பிராமணர் அல்லாதவர் என்ற பிரச்சினை ஏன் வருகிறது என்று தெரியவில்லை. சிவாச்சாரியார்கள் எல்லொரும் பிராமணர்களா என்று சொல்ல முடியாது[7]. ஆகவே, இவ்விசயங்களில் ஊடகங்கள் அரசியல் செய்யாமல் இருந்தால் நல்லது[8].
ஜூலை 2020ல் இரண்டாவது அர்ச்சகர் நியமனம்: இந்த நிலையில் மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளையார் கோயில் அர்ச்சகராக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையின் கீழ் பயிற்சி பெற்ற, மதுரை அர்ச்சகர் பாடசாலை மாணவர் தியாகராஜன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்[9]. இதனை தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது[10]. பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டார் என்று செய்திகள் வந்துள்ளன[11]. “தமிழகத்தில் மேலும் ஒரு பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம்”, என்ற தலைப்பில் செய்திகள்[12]. உண்மையில் அவ்வாறில்லை. ஏற்கெனவே பல கோவில்களில் பிராமணர் அல்லாதவர் பூஜாரியாக இருந்து வருகின்றனர். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இத்தகைய நியமனங்கள் நடப்பது போலிருக்கிறது. கருணாநிதியே, இப்பிரச்சினையை தேர்தலுக்காக ஆரம்பித்தார். 2018, 2020 ஜூலை-ஆகஸ்ட் தேர்தல் காலங்களுக்கு நெருங்கியுள்ளதை கவனிக்கலாம்.
அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்: இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறியதாவது: “பயிற்சி பெற்ற மாணவர் தியாகராஜன் உரிய கல்வித் தகுதி, முறையான நேர்முகத் தேர்வு மூலம் அர்ச்சகராகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை புதூர் அய்யப்பன் கோயிலில் மாரிச்சாமி என்ற இளைஞருக்குப் பணி வழங்கப்பட்டது. இப்படி இதுவரையில் பயிற்சி பெற்றவர்களில் மொத்தமே 2 பேருக்குத்தான் பணி கிடைத்திருக்கிறது. இவர்களைப் போன்றே திறன்படைத்த மற்ற மாணவர்களுக்கு இதுவரையில் ஆகமக் கோயில்களில் பணி நியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மயிலை கபாலீஸ்வரர் உள்ளிட்ட முக்கியக் கோயில்களில் பணி நியமன முறை ரகசியமாகவே இருக்கிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அரசியல் அமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் செல்லாத இடமாக நம்முடைய ஆகமக் கோயில்கள் இருக்கின்றன. இந்து மதத்தில் அனைவரும் சமம். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. அதையும் மீறிக் கோயில் கருவறையில் நுழைவதற்குத் தடை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை நியாயமானதே என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கூட, பிராமணர் அல்லாத இளைஞர்களைப் பணியமர்த்த அரசு தயங்குகிறது”.
இது வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சினை மட்டுமல்ல. சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினை: “பயிற்சி முடித்த 206 பேரில் வெறும் 2 பேரை மட்டும், அய்யப்பன், பிள்ளையார் போன்ற சிறு கோயில்களுக்கு அர்ச்சகர்களாக அரசு நியமித்திருக்கிறது. இது வெறுமனே வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சினை மட்டுமல்ல. இது அரசியல் அமைப்புச் சட்டம் தந்துள்ள, குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினை. எனவே, எஞ்சியுள்ள 204 மாணவர்களுக்கும் அரசு உடனடியாகப் பணி வழங்க வேண்டும். மூடப்பட்ட சைவ, வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பெண்களையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்,” இவ்வாறு அவர்கள் கூறினர். இத்தகைய பேச்சு, தோரணை எல்லாம், ஏதோ, இவர்கள் எல்லோரும், இந்துமதத்திற்கு தொண்டு செய்ததது போலவும், கோவில்களைக் காத்தது போலவும், கோவில் சொத்துகள், சிலைகள் முதலிய கொள்ளைகளைத் தடுதத்து போலவும், இருக்கிறது. திராவிடத்துவ வாதிகள், அத்தனை அக்கரையுடன் செயல் பட்டிருந்தால், இத்தனை கோவில் சொத்துகள், சிலைகள் முதலிய கொள்ளைகள், வழக்குகள் முதலியவை ஏற்பட்டிருக்காதே? நாளைக்கு, நாத்திகன், இந்துவிரோதி, ஏன் இந்து-அல்லாதவன் பயிற்சி பெற்று, பரீட்சை பாஸாகி, சான்றிதழ் பெற்றால், வேலை என்று வந்துவிட முடியுமா? இப்பொழுது, பிஜேபியினால், இந்துத்துவ அரசியலுக்கும் திராவிடக் கட்சிகள் தயாராகி வருகின்றன. ராகுல் காந்தி மாதிரி, ஸ்டாலின் குங்குமம் வைத்துக் கொண்டால் கதை முடிந்தது. ஏற்கெனவே ஆயிரம் விளக்குத் தொகுதியில் அதையெல்லாம் செய்தவர் தான். இப்பொழுது மறைத்து விட்டார்கள். துர்காவை வைத்து பிரச்சாரமும் செய்யலாம்!
© வேதபிரகாஷ்
01-08-2020
[1] விகடன், பயிற்சி முடித்து 14 ஆண்டுகள்… 2 பேருக்கு மட்டுமே பணி! – கொந்தளிக்கும் அர்ச்சகர்கள் , செ.சல்மான் பாரிஸ், ஜெ.முருகன், என்.ஜி.மணிகண்டன், Published:Today at 8 AM; Updated:Today at 8 AM.
[2] https://www.vikatan.com/news/general-news/priest-course-completed-people-not-appointment-in-temple
[3] இந்தியன்.எக்ஸ்பிரஸ்.தமிழ், தமிழகத்தில் 2வது பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம் , By: WebDesk, Published: July 15, 2020, 7:30:10 PM
[4] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-second-non-brahmin-priest-appointed-at-hr-nc-temple-in-madurai-nagalamalai-pudukkottai-207480/
[5] தினத்தந்தி, தமிழகத்தில் முதல் முறையாக பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்…, பதிவு : ஜூலை 31, 2018, 07:38 PM
[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/31193853/1004951/First-NonBrahmin-Appointed-as-Priest-in-Tamil-Nadu.vpf
[7] தினமலர், பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம், Added : ஜூலை 31, 2018 00:53.
[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2071925
[9] தமிழ்.இந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணைப்படி மதுரையில் இன்னொரு அர்ச்சகருக்குப் பணி நியமனம், கே.கே.மகேஷ், Published : 14 Jul 2020 19:21 pm, Updated : 14 Jul 2020 19:26 pm.
[10] https://www.hindutamil.in/news/tamilnadu/564441-everyone-can-become-priest.html
[11] NEWS18 TAMIL, தமிழகத்தில் மேலும் ஒரு பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம், LAST UPDATED: JULY 15, 2020, 12:51 PM IST.
[12] https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-another-non-brahmin-appointed-as-priest-in-madurai-riz-316901.html