Posts Tagged ‘பரத நாட்டியம்’

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழி வெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள் (1)

ஏப்ரல் 9, 2023

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழிவெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள் (1)

கலாக்ஷேத்திராவில் காலடி எடுத்து வைத்த மாணவிகள், இன்று நெருப்பாற்றில் விழுந்ததுபோல் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர்: தினகரன் இவ்வாறு விவரிக்கிறது. பரதமும் இசையும் நமது கலை பண்பாட்டு அடையாளமாக திகழும் நிலையில், இவற்றை வளர்ப்பதற்காக துவக்கப்பட்ட ஒரு கலைக்கூடம், இன்று காம விளையாட்டுக்கான களமாகி, இதுவரை சேர்த்து வைத்த அத்தனை பெருமைகளையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. கவின் கலைக் கல்லூரியான கலாஷேத்ராதான் அது. காலில் சலங்கையுடனும், நெஞ்சில் கலைக் கனவுகளுடனும் இதற்குள் காலடி எடுத்து வைத்த மாணவிகள், இன்று நெருப்பாற்றில் விழுந்ததுபோல் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர்[1]. உலக நாடுகள் வரை பெருமையை பரப்பிய இந்தக் கல்லூரியை, உயரிய நோக்கத்தோடு உருவாக்கியவர் ருக்மணி தேவி. சமூக அக்கறையும், ஆன்மீக சிந்தனையும் கொண்ட இவர், மதுரையில் 1904 பிப்ரவரி 24ல் பிறந்தார். இவரது தந்தை நீலகண்ட சாஸ்திரி சென்னையில் உள்ள தியாசபிக்கல் சொசைட்டியில் பணியாற்றியதால், ருக்மணி தேவியும் சென்னையில் படித்தார். பின்னர் அன்னிபெசன்ட் அம்மையாரை சந்திக்க லண்டனுக்கு ஜார்ஜ் அருண்டேலுடன் 1920ல் சென்றார். அப்போது அவருக்கு வயது 16. அவர், அருண்டேலை திருமணம் செய்து கொண்டார். அந்தக் காலத்தில் சாஸ்திரியின் மகள், அருண்டேலை திருமணம் செய்தது பெரிய புரட்சியாக பார்க்கப்பட்டது.

ருக்மணி தேவி சதிரை பரதநாட்டியமாக்கி அரங்கேற்றியது: அதன்பின்னர் அவர், வெளிநாட்டில் வசித்தபோது ரஷ்யாவின் பாலே நடனத்தை முறைப்படி கற்றார். பின்னர் இந்தியாவுக்கு அவர் திரும்பியபோது தேவதாசிகளால் மட்டுமே ஆடக்கூடிய ‘சதிர்’ என்ற பரதநாட்டிய நடனத்தைப் பார்த்தார். அந்த நடனம், பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த நடனத்தின் மீது பற்றுக் கொண்ட ருக்மணிதேவி, அதை முறைப்படி கற்றுக் கொண்டார். இந்த நடனத்தை பார்ப்பதே தவறு என்ற காலக்கட்டத்தில் இந்த நடனத்தைக் கற்றுக் கொண்டவர், சதிர் என்ற பரதநாட்டியத்தை, பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் ஆன்மிகத்தையும் கலந்து அனைவரும் ரசிக்கும்படி அரங்கேற்றினார். பின்னர் இதை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கலாஷேத்ரா என்ற அமைப்பைத் தொடங்கி பரதநாட்டியத்தை உலகறியச் செய்தார். ஆரம்பத்தில் இங்கு பரதநாட்டியம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் மோகினி ஆட்டம், கேரளாவின் கதகளி ஆகிய நடனங்களோடு சேர்த்து, வீணை, வயலின் மற்றும் பாட்டு ஆகிய கலைகளோடு, சிற்ப கலை. பெயின்ட்டிங், நெசவு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். நெசவில் இயற்கை முறையிலான சாயத்தையும் பயன்படுத்தி நெசவு செய்ய தறிகளையும், நெசவுக் கூடங்களையும் ருக்மணிதேவி ஆரம்பித்தார். கலாஷேத்ரா புடவை உலக பிரசித்தி பெற்றவை.

கலாக்ஷேத்திரம் செக்ஸ் ஷேத்திரமாக மாறியது; சமூக அக்கறை மற்றும் ஆன்மீகத்தை வளர்க்க ஆரம்பிக்கப்பட்ட இந்த கலாஷேத்ரா, இன்று செக்ஸ் ஷேத்திரமாக மாறியதைக் கண்டு முன்னாள் மாணவ, மாணவிகள், அந்த நிறுவனத்தோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள், அதன் நலன் விரும்பிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ருக்மணிதேவியின் சேவையைப் பார்த்த மெரார்ஜி தேசாய், 1977ம் ஆண்டு ருக்மணி தேவிக்கு குடியரசுத் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஆனால், தனக்கு ஜனாதிபதி பதவி வேண்டாம் என்று மறுத்த ருக்மணி தேவி, மக்களுக்கு தொண்டு செய்வதுதான் முக்கியம் என்றார். இதற்காக கலாஷேத்ராவில் இந்த நடனம், இசை கல்லூரியோடு, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அடங்கிய இரு பள்ளிகளும் தொடங்கப்பட்டன. சமூக மாற்றத்திற்காக தொடங்கப்பட்டு நாட்டின் உச்சப்பட்ச பதவியான ஏன் இந்த நாட்டின் முதல் குடிமகனாக பார்க்கப்படும் ஜனாதிபதி பதவியை வேண்டாம் என்று தள்ளிய ருக்மணிதேவியின் நிறுவனம், இன்று பணத்தை பங்கிடுவதிலும், பதவிக்காக ஒருவரை ஒருவர் வீழ்த்துவதிலும் பதவி வெறி ஷேத்திரமாகவும், செக்ஸ் ஷேத்திரமாகவும் மாறியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ருக்மணி தேவிக்குப் பிறகு வாரிசு போட்டி: ருக்மணி தேவிக்குப் பிறகு சங்கரமேனன், நிர்வாகத்துக்கு பொறுப்பு ஏற்றார். அவரது காலத்துக்குப் பிறகு, கலாஷேத்திராவின் தரமும் நிறமும் மாறி விட்டது. அவரது நிர்வாகம்தான் சிறந்த நிர்வாகம் என்று போற்றப்பட்டது. அவரது காலத்தில் 1991ல் அடுத்த வாரிசு (தலைமைப் பதவிக்கு) யார் என்ற போட்டியில் சங்கரமேனன் (1907-1995) தாக்கப்பட்டார். அந்த தாக்குதலை நடத்தியது யார்? யாருக்காக தாக்குதல் நடந்தது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. 84 வயதான கிழவரைத் தாக்கினர் என்பது வேடிக்கையாக இருக்கிறது. ‘அந்த தாக்குதலுக்குப் பிறகு மனமுடைந்த சங்கரமேனன், சில மாதங்களிலேயே உயிரிழந்தார். அவர் மரணத்துக்கு தாக்குதலும் ஒரு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது,’ என்று தினகரன் கூறுகிறது.

கலாஷேத்திராவை ஒன்றிய காங்கிரஸ் அரசு கையகப்படுத்தியது; சங்கரமேனன் நிர்வாகம் செய்த காலத்தில், சாரதா ஆப்மென் டீச்சர், பத்மாஷினி டீச்சர், கமலா டீச்சர் ஆகியோர் பணியாற்றினர். அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு ருக்மணி தேவையை போல் உயரிய பண்புகளையும் போதித்து வழிநடத்தினர். அவர்கள் மாணவ, மாணவிகளோடு சக நண்பர்களாக பழகி, கலாஷேத்திரத்தை வளர்த்தனர். அவர்களது காலத்துக்குப் பிறகு அந்த இடங்களை இதுவரை யாரும் நிரப்பவில்லை. வெற்றிடமாக உள்ளது. இதனால் சங்கரமேனன் காலத்துக்குப் பிறகு, 1993ம் ஆண்டு ஆர்.வெங்கட்ராமன் (1987-1992) ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பரிந்துரையின் அடிப்படையில் கலாஷேத்திராவை ஒன்றிய காங்கிரஸ் அரசு கையகப்படுத்தியது. அப்பொழுது திராவிட கட்சிகள் எல்லாம் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை போலிருக்கிறது, பார்ப்பன ஆதிக்கத்தையும் கவனிக்கவில்லை போலும்.

ஒன்றிய காங்கிரஸ் அரசு, லீலா சாம்சனைநியமித்தது: நிதி உதவிகளை ஒன்றிய அரசே செய்ய ஆரம்பித்தது. அதன்பின்னர் ஒன்றிய காங்கிரஸ் அரசு, லீலா சாம்சன் என்பவரை இயக்குநராக நியமித்தது. அவரது காலத்தில் பல போட்டிகளை நடத்தத் தொடங்கியதால், நிதி கொட்ட ஆரம்பித்தது. ஒன்றிய அரசும் பணத்தை வாரி இறைத்தது. இதனால் சமூக அக்கறையோடு தொடங்கப்பட்ட கலாஷேத்ராவில் அரசியல் புகுந்து விளையாடத் தொடங்கியது. பல நிதிமுறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இருப்பினும், திராவிட கட்சிகள், துப்பறியும் வல்லுனர்கள், நக்கீரன் – கோபால் போன்றோர் கண்டுகொள்ளவில்லை போலும். பின்னர் பாஜ தலைமையில் ஒன்றிய அரசு அமைந்தபோது, அவர் வெளியேற்றப்பட்டார்.

பணத்தை சுருட்ட போட்ட புது திட்டம்: கலாஷேத்ரா மாணவர்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெங்களூர், டேராடூன், அகமதாபாத் ஆகிய நகரங்களில் கலை நிகழ்ச்சிக்கள் நடத்தப்படும். இதற்காக கோலம் போடுவது முதல் அனைத்துப் பணிகளுக்கும் ஆட்களை அழைத்துச் செல்வார்கள். இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படும். அதில்தான் முறைகேடுகள் நடக்க ஆரம்பித்தன. முன்பு சென்னையில் உள்ள கலாஷேத்ராவில்தான் போட்டிகள் நடத்தப்படும். ஆனால் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் நிர்வாகம் சென்ற பிறகு வெளி மாநிலங்களில் நடத்த ஆரம்பித்தனர். அப்போதுதான் பணத்தை சுருட்ட முடியும் என்று முடிவெடுத்தனர்.

கேரளத்தவர் அதிகமாக நியமிக்கப் பட்டது: அதோடு, இதற்காக கலாஷேத்ராவில் தற்காலிகமாக (ரெப்பெட்ரி கம்பெனி) ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவு மூலம்தான் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹரிபத்மன், சஞ்சித் லால், சாய்கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு ரேவதி ராமச்சந்திரனால் நியமிக்கப்பட்டனர். இவர்களோடு சேர்த்து மோகன், கிரித்மது, கே.பி.ராகேஷ், ஸ்ரீஜித் மற்றும் ஜோஷ்னா மேனன், ஸ்ரீதேவி, இந்துநிதி ஆகிய பெண் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்த கேரளா ஆசிரியர்களுக்கு தலைவர்போல ஹரிபத்மனும், ஜோஷ்னா மேனனும் செயல்பட்டு வந்தனர்.

© வேதபிரகாஷ்

09-04-2023


[1] தினகரன், உலகப் பிரசித்தி பெற்ற கலைகளின் ஷேத்திரம் செக்ஸ் ஷேத்திரமாக மாறியது எப்படி? பணத்துக்காக பாதை மாறிய பயங்கரம், April 4, 2023, 2:24 am